என்ன செய்வாய் நீ? அழகாய் சிரிப்பாயா? அழுது அடம் பிடிப்பாயா? கோபம் கொள்வாயா? குறும்புகள் செய்வாயா? அன்னைஎன் மடியில் தவழ்வாயா? தந்தையின் தோளில் துயில்வாயா? முத்தம் கொடுப்பாயா? முறைத்துக் கொண்டு நிற்பாயா? ஆணாய் பிறந்து நாடாள்வாயா? பெண்ணாய் பிறந்து வீடாள்வாயா? சமர்த்தாய் உண்பாயா? சாப்பிட மாட்டேன் என்பாயா? ஐந்து மாதம் முடியும் முன்னே, ஆயிரம் கனவுகள் என் நெஞ்சில்...! கருவறை நீ தாண்டும் முன்பே கற்பனை கோடி என் கண்ணில்......! கொஞ்சம் பொறுத்துக்கொள். ஈரைந்து மாதம் தான், இந்தச் சிறை உனக்கு....! வருங்காலம் உனக்காக, காத்துக்கொண்டு இருக்கு.....! நிலமான என்னுள்ளே, விதையாக இருக்கும் நீ, மரமாகும் காலம் வரை , மறவாமல் காத்திருப்பேன்.....! கருவறை நீ தாண்டும் போதே, உன் கவலைகளை நான் கொள்வேன்........! பிறக்கும் உன் வலியைக் கூட, பிரசவ வலியாய் நானே ஏற்பேன்........! என் செல்வமே......! சிறைப்பட்டுக் கிடக்கும் நீ, சிறகு விரித்துப் பறக்கும் போது, காவலாய் நானும் வருவேன், காற்றாக உன்னோடு.......! -செல்லா