சில கிறுக்கல்கள்..!

எதையாவது ஒன்றை
ஒரு குறுஞ்செய்தியாய் அனுப்ப எத்தனிக்கிறது மனம்..!
விரல் வழியே
ஓர் உரையாடலைத் துவக்கி,
மெதுவாய்
உன்னோடு பேசத் துவங்கி,
சிரிதாய் நின்னைச் சிரிக்க வைத்து,
மெலிதாய்க் கொஞ்சம் கோபப்படுத்தி,
கொஞ்சம் கொஞ்சி,
கொஞ்சம் கெஞ்சிப்
பேசிட நினைத்த
நினைவுகளையெல்லாம்,
வெறுமனே அழித்துப் போகிறேன், உனக்கு
அனுப்ப வேண்டி எழுதி வைத்த
குறுஞ்செய்தியுடன்.
வெட்கப்பட்டுக் கொண்டல்ல,
எங்கே இவை
வேதனைப்படுத்தி விடுமோ என்றெண்ணி..!


உன் அருகாமையை வீசிப் போகும்
அதிகாலைப் பொழுதுகள்
என்றும் சுகமானவை
எனக்கு....!


உன்னைக் காதலிப்பதில்
எப்பொழுதுமே போட்டிதான்,
எனக்கும், என் கவிதைகளுக்கும்...!
அதிகமாய் நேசிப்பதென்னவொ நான் தான்..!
ஆனால்
ஜெயிப்பதென்னவோ
கவிதைகள் தான்..!
அவை தானே உன் அன்பைப் பெறுகின்றன,
"அருமையான கவிதை" என்று...!


கவிதைகளால் காதலிக்கிறேன் நான்!
மெளனத்தால் நிராகரிக்கிறாய் நீ!
நடுவில் அவஸ்தையாய் காதல்..!


கவிதையை நேசித்துவிட்டு,
கவிஞனை வெறுக்கும்,
இக்கால முரண்தொடை
நீ....!


அலைபேசி வேலை செய்கிறதா என,
அடிக்கடி சரி பார்க்கிறேன்.
உன் அழைப்பு வராத போது..!


மனப்பாடமாகத் தெரிந்தாலும்
பதிந்தே வைக்கிறேன் உன்
அலைபேசி எண்ணை..!
வரும் ஒவ்வொரு குறுந்தகவலும்,
உன் பெயரை காட்டட்டுமே என..!




-செல்லா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு விபரீத விளையாட்டு!